10ஆம் வகுப்பு மதிப்பெண்கள்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

10ஆம் வகுப்பு மதிப்பெண்கள்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை





10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்களது பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்கள், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இத்தேர்வுகளுக்கு வராத மாணவர்களுக்கு தனியாக தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், காலாண்டு, அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்க சில தனியார் பள்ளிகள் லஞ்சம் கேட்பதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.





 

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.