ஜூன் மாதத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு?


ஜூன் மாதத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு?


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வருகிற ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பின்பற்றி வருகின்றன.

 

தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களுக்கு ஏற்ப சில தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதனிடையே, பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால்,பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கண்டிப்பாக நடத்தப்படும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை. ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிகல்வித்துறையும் விளக்கம் அளித்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வருகிற ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.