10th Public Exam நடைபெறுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி நிலவரப்படி, இதுவரையில் தமிழகத்தில் 900 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் உடல்நலம் திரும்பியுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரமடையும் இந்த சூழலில் திட்டமிட்டபடி10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யும்படி அரசியல் கட்சியினரும், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தோ்வு எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம், எனவே 10ஆம் வகுப்பு மாணவா்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி தோ்வுக்கு தயாராகும் படி வேண்டுகோள் விடுத்துள்ளாா்,